Sunday, July 1, 2012

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இஸ்லாமியன் மரியாதை தரலாமா?

தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒரு பாடிசைப்பார்கள். அதற்கு விழாவினர் எழுந்து நின்று கண்மூடி ஆழ்ந்த மரியாதை தருவார்கள் அது நம் இஸ்லாமிய மார்கத்திற்கு உகந்ததா? ”தரித்த நறும் திலகமுமே” என்றெல்லாம் வருகிறது. திலகம் என்றெல்லாம் சொல்வது சரியா? இறைவனுக்கு இணைவைப்பதாக ஆகாதா?


தமிழ்த்தாய் வாழ்த்து என்றதும் அதை இறைவனுக்கு இணைவைப்பதாக நினைக்கிறார்கள் சிலர்.  அது தவறான கருத்தாகும்.

தாய் சிறந்தவள், தாய்மொழி இனிமையானது, தாய்நாடு நேசம் மிகுந்தது என்று எத்தனையோ விசயங்கள் மனிதனோடு இரண்டறக் கலந்து கிடப்பவை.

ஓர் ஆன்மிகவாதிக்குத் தன் இறைவனோ உள்ளத்தின் உயர்ந்த இடத்தில் இருக்கிறான்.

தாய், தாய்மொழி, தாய்நாடு ஆகியவற்றின் மீதான அவன் பற்றும் பாசமும் நேசமும் தன் இறைவனை அவன் எங்கே வைத்திருக்கிறானோ அந்த இடத்திலிருந்து இறக்கிவிட்டுவிட வழியே இல்லை.

அப்படி இறக்கிவிட்டுவிடுமானால், அவனுடையது உண்மையான பக்தியே இல்லை.

நெகிழ்வதும், மகிழ்வதும், புகழ்வதும், வாழ்த்துவதும், பாராட்டுவதும், அன்பு செய்வதும், கருணை கொள்வதும், கூடாது என்றால் மனித வாழ்க்கையே கூடாது என்று பொருளாகிவிடும்.

மனித வாழ்க்கையை அனுபவிக்காவிட்டால் பிறகு மனித வாழ்க்கையே தேவையில்லை. இறைவனோ மனித வாழ்வை அனுபவிக்கச் சொல்கிறான்.

தமிழ்த்தாய் வாழ்த்து:

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !


பொருள்:

அலை கடலே ஆடையான
இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு
பாரத நாடே முகமாம்
தென்திசை அதன் நெற்றியாம்
அதில் திலகமென திகழ்வது திராவிடத் திருநாடாம்
அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண
எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும்
பெருமை மிக்க பெண்ணான தமிழே
என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய
இந்த அழகைக் கண்டு வியந்து,
செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம்

இந்த அழகான பாடலில் இறைவனுக்கு இணைவைப்பது என்று ஏதேனும் உள்ளதா?

மதம் என்று வரும்போது சிலரின் உணர்வுப் பூர்வமான உள்ளம் கொக்கின் தலையில் வெண்ணை வைக்கும் அளவுக்கு அறிவின் ஒளியைக் குறைத்துக் கொண்டுவிடுவது இறைவனே விரும்பாத ஒன்று.

இறைவன் தன்மீது நம்பிக்கை கொள்ளச் சொல்கிறான். மூட நம்பிக்கை கொள்ளச் சொல்லவே இல்லை.

இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு சிறப்பினைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொல்தான் திலகம்.

நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என்றெல்லாம் கூறுகிறோம். அதன் பொருள் என்ன? உயர்வானது சிறப்பானது என்பதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா?

இறைவனுக்கு இணைவைப்பது என்றால் இன்னொருவனைக் காட்டி இவனும்  இறைவன் என்று கூறி தொழுவது.

”பாரதத்தின் நெற்றியான தென் திசையின் திலகமாக இருப்பது திராவிடத் திருநாடு” எத்தனை அழகாக இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பாராட்டாமல், வேண்டாததை ஏன் நினைக்கின்றன சில மனங்கள்.

ஏனெனில் இவர்களின் மனம் எப்போதும் ஏதோ ஓர் அச்சத்திலேயே இருக்கிறது.

அதிலிருந்து விடுதலை பெற்று வாழ்வைச் சுவைத்தால் எவரும் மகிழ்வார்  இறைவனும் மகிழ்வான்.

தீமைகளிடமிருந்து விலகிவிடுதலில் மட்டுமே அச்சம் கொள்ளுதல் வேண்டும். இறைவன் தடுக்காத வற்றைத் தடுத்துக்கொள்ளும் அச்சத்தை இறைவன் விரும்பவில்லை. கண்டிக்கிறான்.


 ”மார்க்கத்தைவிட - மொழி முக்கியமாகப் போகிவிட்டதா? கவிதை, இணைவைப்பதைத் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு, வெளியே தெரியாமல் ஆக்கும் தன்மை கொண்ட விஷம்.


மார்க்கம் என்ற சொல்லும் அல்லாஹ் என்ற சொல்லும் குர்-ஆன் வசனங்களும் மொழிதான்.

மொழியில்லையேல் நீங்களும் நானும் உரையாடிக்கொண்டிருக்க முடியாது.

மொழியின் வழியாகத்தான் இறைவன் குர்ஆனை அருளினான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

காட்டுமிராண்டிகளை மீட்டு மனிதர்களாக்கிய பெருமை மொழிக்கு உண்டு.

மொழியைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். மொழியில்லையென்றால் இன்று நீங்கள் காணும் பண்பட்ட உலகமே இல்லை.

அன்பு பாசம் கருணை ஈகை மனிதம் பண்பு மொழி இலக்கியம் கவிதை கலை என்று மனித நாகரிகத்தின் செயலும் வளர்ச்சியும் ஏராளம் ஏராளம்.

மார்க்கம் என்பது இவற்றை மறுத்தால் அது எப்படி மார்க்கம் ஆகும். வழி தராத ஒன்று வழியாகுமா? பாதை தராத ஒன்று பாதையாகுமா? மார்க்கம் தராத ஒன்று மார்க்கம் ஆகுமா?

ஆகவே இறைவன் அருளிய அழகிய மார்க்கத்தைத் தவறாக எண்ணிக்கொண்டு இறைவனுக்கே நாம் கலங்கத்தை உண்டுபண்ணுதல் கூடுமா என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

இணைவைப்பது என்பது கவிதையால் மட்டுமே ஆகக்கூடியதில்லை, வெறுமனே ஒரு அத்துமீறல் செயலாலும் ஆகக்கூடும். ஒரு சொல்லாலும் ஆகக்கூடும். ஒரு சிறுகதையாலும் ஆகக்கூடும். ஒரு கட்டுரையாலும் ஆகக்கூடும். ஒரு நாடகத்தாலும் ஆகக்கூடும். ஒரு சினிமாவாலும் ஆகக்கூடும். ஒரு விமரிசனத்தாலும் ஆகக்கூடும்.

உங்கள் நிலைபாட்டில் நின்று, உறுதியாக இணைவைத்தலை வேண்டாம் என்று கூறுங்கள். அது ஏற்புடையது.

ஆனால் கவிதையை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது மார்க்கத்தை ஆழமாக அறிந்துகொள்ளாமல் அவசரமாக முடிவெடுக்கும்  நிலைப்பாட்டைத் தவிர வேறெதையும் சொல்ல வழியில்லை.

மார்க்கத்தைப் பலரும் தடுப்புச் சுவராகவே நினைக்கிறார்கள். மார்க்கம் என்பது திறந்த பெரும் பாதை என்பதை உணர்வதற்கு அவர்களுக்கு அனுபவமும் போதுமானதாய் இருப்பதில்லை அறிதலும் போதுமானதாய் இருப்பதில்லை.

மதமும் நம்பிக்கையும் நமக்கும் இறைவனுக்குமான நேரடித் தொடர்பு. அதன் இடையே குறுக்கிட எவருக்கும் ஞானமில்லை என்று நினைப்பதே கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியானதாக ஆகும்.

6 comments:

  1. கரி காலன்July 1, 2012 at 1:28 PM

    அழகான சிந்தனைகள் அருமையான வரிகள்!
    வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  2. கோவி.கண்ணன்July 1, 2012 at 1:29 PM

    தெரிந்த்வர்களுக்கு காலை வணக்கம் சொல்வதைக் கூட இறை வணக்கத்துடன் ஒப்பிட்டு பார்ப்பவர்கள் உங்கள் பதிவை 'கோடாலி காம்பு' ரேஞ்சுக்கு எடுத்துக் கொள்வார்கள்.

    :)

    ReplyDelete
  3. குடுகுடுப்பைJuly 1, 2012 at 1:31 PM

    புகாரி நீங்கள் மேலத்தோட்டம், கீழத்தோட்டத்திற்கு எப்போதும் புரியவைக்கமுடியாது

    ReplyDelete
  4. Anbulla Sago,

    MaNam niRaivai uLLathu. VaazhththukkaL

    Nalina

    ReplyDelete
  5. முனைவர் பரமசிவம்July 1, 2012 at 1:32 PM

    நண்பரே,

    ’தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இஸ்லாமியன் மரியாதை தரலாமா?’ என்பது தங்கள் இடுகையின் தலைப்பு.

    “தரலாம்” என்று இஸ்லாமிய உடன்பிறப்புகள் பலரும் சொல்லும் போதுதான் தங்களின் இந்தப் பதிவுக்குப் பலன் கிடைத்ததென மகிழ்வது சாத்தியமாகும்.

    சரிதானே?

    ReplyDelete
  6. கரிகாலனுக்கு நன்றி

    கோவி.கண்ணன், கோடாலி காம்பு என்று கூறியதை ரசித்தேன். ஏதோ நாம் மயிலிறகாகவே சொல்லிப்போவேமே!

    குடுகுடுப்பை, நாம் நம் எண்ணங்களைத் தெளிவாக எடுத்து வைப்போம். போய்ச்சேராதவர்களுக்குப் போய்ச்சேராதுதான். ஆனால் போய்ச்சேரவேண்டிய மிகப் பலருக்கும் போய்ச் சேருமே, அது எத்தனை பலன் தரவல்லது?

    நளினா, நன்றி

    முனைவர் பரமசிவம், பாரதி தன் பூணூலைக் கழற்றி ஒரு கீழ்சாதிக்காரனுக்கு இட்டு எல்லாம் செய்துவைத்தான். அவன் இனத்தில் அதை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாரதி கவலையே படவில்லை. என்னை ஏன் கவலைப்படச் சொல்கிறீர்கள்? அதோடு ஒரு முக்கிய செய்தி, போய்ச்சேரவேண்டிய பலருக்கும் அது சரியாகவே போய்ச் சேர்ந்திருக்கிறது. மறுப்பு என்பது 1 விழுக்காடு என்றே கண்டேன். அது யாருக்கு இல்லை?

    ReplyDelete