Saturday, October 27, 2012

ஆங்கிலமும் தமிழும் பைத்தியக்காரர்களின் மொழி


ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று.

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன் STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH என்று படிக்கலாமா கூடாதா என்றும், இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா? இல்லையா? என்றும் கேட்டாராம்.

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று பெர்னாட்சா சொல்லலாம். ஆனால் அவருக்கே தெரியும் எந்த மொழியிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு என்று.

இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.

புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது.

மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்

இதையே வேறு விதமாகவும் அழகான அருந்தமிழில் தமிழர்கள் கட்டினார்கள்

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
மன்னன் : தருகிறேன்.

புலவர்: அறுநூறு தரமுடியுமா?
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எண்ணூறு மகிழ்ச்சியாக இருக்கும்.
மன்னன்: தருகிறேன்.

ஆனால், மன்னன் கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றீறே?
மன்னன்: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: அறுநூறு தருகிறேன் என்றீறே?
மன்னன்: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றீறே?
மன்னன்: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
மன்னன்: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும், மன்னனே உங்கள் தமிழ்முன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.

மன்னனும், புலவரே, யாம் தமிழுடன் விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

No comments:

Post a Comment